மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணிக் கூட்டம் 08.09.2026 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ப.தினேஸ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையின் தற்போதைய நிலைமை மற்றும் அதனைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை மேம்படுத்துதல் பாடசாலைகள் மற்றும் சமூக மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரச நிறுவனங்கள், பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்கத் துறையினர், சுகாதார மற்றும் கல்வித் துறையினர், சமூக அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து சமூகத்துடன் மீள இணைக்கும் வகையிலான ஒருங்கிணைந்த செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள் , பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








