அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (18.09.2026) தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி, பேராசிரியர் சேன நாணயக்கார, பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும், வலுசக்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரசல் அபோன்சு, அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகளும், மின்சார சபையின் மறுசீரமைப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளும், மஞ்சுல பெரேரா – முகாமைத்துவப் பணிப்பாளர்- WindForce PLC மற்றும் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், ஸ்டோர்எக்ஸ்(Storex) தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
வலு சக்தியை சேமிக்கும் மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது, தற்போதைய வலுசக்தித்துறையில் உள்ள மிக முக்கிய மற்றும் மிகவும் வினைத்திறனான தொழில்நுட்பமாகும். பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய சக்தியைச் சேமித்து, இரவு வேளையில் மின்சாரதிற்கான கேள்வி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் தேசிய கட்டமைப்புடன் இணைப்பதே இத்தொழில்நுட்பத்தின் வீசேட அம்சமாகும்.
தேசிய மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில், 13 வலுசக்தி சேமிப்பு கட்டமைப்புகளை 130 மெகாவோட் மற்றும் 520 மெகாவோர்ட் மணித்தியால கொள்ளளவுடன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் பணிகள் Storex தனியார் நிறுவனத்தின் முழுமையான திட்டத்தின் கீழ்மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, முதலாவது வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு அநுராதபுரத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. எஞ்சிய திட்டங்களும் எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மின்கல சேமிப்பு கட்டமைப்பு அமைந்துள்ள வளாகத்தையும் பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், தம்மென்னாபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அச்சுஇயந்திரம் மற்றும் அந்தப் பாடசாலையில் சாதாரண தரத்தில் கணித மற்றும் விஞ்ஞானப் பாடங்களைக் பயிலும் மாணவர்களுக்காக 10 புலமைப்பரிசில் என்பன ஜனாதிபதியால் அடையாள ரீதியாக வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக,
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றலை பெருமளவில் பயன்படுத்தி, தூய்மையான வழியிலான மின்சார உற்பத்தி மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வினைத்திறனான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கங்கள் நனவாக்கப்படும் ஒரு சந்தர்ப்பமாக இதனை குறிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ அருண கருணாதிலக,
உலகின் வலுசக்தித்துறையானது பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் திருப்புமுனைகளுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை நாம் அறிவோம். இலங்கையின் வலுசக்தித்துறை, குறிப்பாக மின்சாரத்துறையைக் கருத்திற்கொள்ளும்போது, இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும். தற்போதைய அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் மின்சாரத்துறையில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றமானது மிகவும் முக்கியமானதென நாம் நம்புகிறோம்.
நாம் ஏற்கனவே பகல் வேளையில் சூரிய சக்தியின் மூலம் சுமார் 3,000 மெகாவொட் அளவை உற்பத்தி செய்கிறோம். பகல் வேளையில் பொதுவாக 2,800 மெகாவொட் அளவிலான மின்சாரத் தேவையே உள்ளது.
எனினும், இரவு வேளையில் நமக்கு 3,100 மெகாவொட் வரையான கேள்வி காணப்படுகிறது. எல் நினோ நிலைமையுடன் சேர்த்து, ஒருவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பகல் வேளைகளில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இதுவரை இல்லாதிருந்தமையே நமக்கு நிலவிய பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக நாம் தற்போது 160 மெகாவொட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
அதில் 130 மெகாவொட் தொடர்பான பொறுப்பை WINDFORCE நிறுவனம் ஏற்றுச் செயல்படுகிறது. இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் இந்த 160 மெகாவொட்டையும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம்.
அதேபோன்று, மேலும் 400 மெகாவொட், 250 மெகாவொட் மற்றும் 150 மெகாவொட் என மின்கல சேமிப்புக்கான இதே வகையிலான விலைமனுக் கோரல் நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அவற்றில் சில மதிப்பீட்டு மட்டத்தில் உள்ளன.
2027 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், பெரும்பாலும் முதல் 6 மாதங்களுக்குள், அந்தத் திட்டங்களையும் நமது மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம்.
இதன் மூலம் ஒருபுறம் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடிவதுடன், மறுபுறம் இரவு வேளையில் அதிகளவில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படும் அதிக செலவைக் குறைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பாக அமைகின்றது.
அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும், திறமையான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குமான நமது அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கமைய, இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக்குவதற்கு பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் தெரிவித்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








