ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்போம் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகர் ஞானேந்திரன் தலைமையில் 24.03.2024 அன்று வைத்தியசாலை வளாகத்தில் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நோயாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்ட காப்போம் அரச சார்பற்ற நிறுவனமானது ஏழை மக்களுக்கு உதவி செய்வோம் எனும் தொனிப்பொருளில் தமது செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது.
இதன் போது அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையின் சேவையை பாராட்டி எதிர்காலத்தில் வைத்தியசாலைக்குரிய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிபர் இதன் போது கருத்து தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே புற்றுநோயாளர்களை பராமரிக்கும் இந்நிலையமானது இன மத பேதமின்றி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழங்கி வருகின்றது.
மேலும் தற்பொழுது இங்கு வெளிமாவட்ட நோயாளர்களும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் குழு உறுப்பினர்களான வைத்தியர் எம்.எஸ்.எம்.லாபிர், பொறியியலாளார் எஸ்.எல்.ஹாலிதீன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசிர், எம்.எஸ்.அப்துல்ஹை, ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ.நூகுலெப்பை, ஏ.ஜி.அஜீவத் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










