இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என வடக்கு மாகாண நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவர் தனது உரையில், வடக்கு மாகாணத்தில் போருக்கு முன்னர் அதிகளவான தொழிற்சாலைகள் இயங்கின. அதன் ஊடாக அதிளவானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அவ்வாறான தொழிற்சாலைகள் இல்லை. அதனால் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையாக இருக்கின்றது.
பல்கலைக்கழகங்களுக்கு ஒரு தொகுதியினரே தெரிவு செய்யப்படுகின்றனர். சிலர் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையிலோ, உயர்தரப் பரீட்சையிலோ சித்தியடையாவிட்டால் அவர்களுக்கும் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான கற்கைநெறிகள் உதவிசெய்யும். தொழிற் பயிற்சி அதிகாரசபை ஊடாக கற்கைநெறிகளைக் கற்ற பலர், மேலதிக கற்கைநெறிகளையும் கற்று உயர்நிலைக்கும் வந்திருக்கின்றார்கள்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நல்லதொரு சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. பல முதலீட்டாளர்கள் எமது மாகாணத்தை நோக்கி வருகின்றார்கள். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் புதிதாக உருவாக இருக்கின்றன. எனவே இவ்வாறான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நீங்கள் அதில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதேநேரம், இங்கு தற்போது இயங்கும் ஒரு சில தொழிற்சாலைகளும் வேலைக்கு பொருத்தமானவர்கள் தங்களுக்குத் தேவை என்று கூறுகின்றனர். எனவே இங்கு கல்வி கற்று வெளியேறும் நீங்கள் அவ்வாறான தொழில் வாய்ப்புக்களுக்கும் செல்ல முடியும். அதைவிட முக்கியமாக நீங்கள் எதிர்காலத்தில் தொழில் வழங்குனராக மாறவேண்டும். அதன் ஊடாகவே, எமது மாகாணத்தை இன்னமும் வளப்படுத்த முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்போது ஆளுநர், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் ஆளுநருக்கும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், யாழ். மாவட்டச் செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










