ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
“தலதா வழிபாட்டிற்கு தற்போது சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான வசதிகள் செய்யப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், கண்டி உயர்நிலைப் பெண்கள் பாடசாலையில் இம் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில், தலதா வழிபாட்டில் கடமையில் ஈடுபட்டுள்ள தபால் மூல வாக்குள்ள பொலிஸ் அதிகாரிகளின் வாக்கு பதிவு நடைபெறும். இதற்காக விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் அதிகாரிகளுக்கு அவர்களின் வாக்கை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பான வழிகாட்டல்கள் பொலிஸ் மா அதிபருக்கும், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க 648,495 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான தபால் வாக்கு அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால் வாக்கு பதிவு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையே கலந்துரையாடல் 21.04.2025 அன்று நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










