மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செயிரி வாரம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.09.2025 அன்று இடம் பெற்றது.
“க்ளின் சிறிலங்கா” தேசிய திட்டத்துடன் இணைந்து செயிரி வாரத்தினையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினுடாக அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் “செயிரி வாரம்” என பெயரிடப்பட்டு 4 நாட்களுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் காண்பது மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல் போன்ற பல விடயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் பலன் தரு மரங்களை நடுதல் போன்ற பல நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
செயிரி வாரம் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் நான்கு நாட்கள் மட்டும் இதனை மட்டுப்படுத்தாது இத்திட்டத்தினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், பிரதம பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










