சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்க ராஜா தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 06.09.2025 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கி சென்கொங் (Qi zhenhong) மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப் பொருளின் கீழ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற நிகழ்வில் மக்களுக்கான 100 உலர் உணவுப் பொதிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட 07 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்கள் சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த சீன தூதுவர்,
சீன அரசானது எப்போதும் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதுடன் கடந்த பொருளாதார தலம்பல் காலங்களில் இலங்கைக்கு நண்பனாக உதவியது என சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் சீனத் தூதுவரின் பாரியார் ஜின் குவான், தூதரக அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினரினால் கடந்த காலங்களில் களுவன்கேணி கிராமத்தில் உள்ள வயோதிபர்கள், விசேட தேவையுடையோர்கள் என தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










