வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் 18.09.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வலுசக்தித் துறை முதலீட்டாளர்கள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இந் நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
விசேடமாக, புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில்,வலுசக்தித் துறைக்கு அதிக தேவை இருப்பதாகவும், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறித்த துறை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அதிக அளவு வரி செலுத்த வேண்டியிருப்பதால், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலுசக்தித் துறைத் தரப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும்,வலுசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் வலுசக்தி துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுடனும் விரைவில் மீண்டும் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலுசக்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துதல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் இதற்காக உற்பத்தியாளர்களின் பங்களிப்பைப் பெறுதல் குறித்தும் அதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










