மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசம்பர் 10ஆந் திகதி வரையும் 23 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு பிரிவில் 06 பேரும் ஓட்டமாவடி, வவுணதீவு மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் தலா 03 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர், ஆரையம்பதி, காத்தான்குடி, கிரான், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 23 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி மற்றும் பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் த.சரவணன் தெரிவித்தார்.
கடந்த மாதம் மொத்தமாக 85 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஏறாவூர், ஓட்டமாவடி, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், செங்கலடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தவபாலசுப்பிரமணியம் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










