பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தாமதங்களைத் தவிர்க்க ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி வழங்கிய புள்ளிவிபரங்களின்படி,
டிசம்பர் 17 ஆம் திகதி நாடு முழுவதும் 162,026 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.
இதில் கொழும்பு – கட்டுநாயக்க பாதையில் மட்டும் 44,013 வாகனங்கள் பயணித்துள்ளன.
மேலும், டிசம்பர் 23 ஆம் திகதி மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 163,918 ஆக அதிகரித்துள்ளது.
கட்டுநாயக்க பாதையில் 48,736 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், சீதுவ பரிமாற்ற நிலையத்தினூடாக மட்டும் 18,681 வாகனங்கள் வெளியேறியுள்ளன.
இந்த நிலையில், வெளியேறும் வாயில்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க, வெளியேறும் வாயிலை நெருங்கும் போது, நுழைவுச் சீட்டு மற்றும் செலுத்த வேண்டிய பணம் அல்லது அட்டையைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பணமாகச் செலுத்தும் போது, சரியான தொகையை வழங்குவது நேரத்தைச் சேமிக்க உதவும்.
சாதாரண நிலையில் ஒரு வாகனத்திற்கு 12 முதல் 15 வினாடிகள் மட்டுமே கட்டணம் செலுத்தத் தேவைப்படும்.
கட்டணச் சாவடிகளில் உள்ள ஊழியர்களிடம் வீதி நிலைமைகள் அல்லது நெரிசல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய உரையாடல்கள் பின்னால் வரும் வாகனங்களுக்குப் பெரும் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.
இதே வேளை, மின்னணு கட்டண வசூலிப்பு முறை தற்போது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
மின்னணு கட்டண வசூலிப்பு வசதியைப் பயன்படுத்தும் வாகனங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட பாதைகளிலேயே நுழையவும் வெளியேறவும் வேண்டும்.
சாதாரண பாதைகள் ஊடாக நுழையவோ வெளியேறவோ முயற்சிப்பது தொழில்நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், ஒட்டுமொத்தப் போக்குவரத்துக்கும் இடையூறாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










