அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் மிகச்சிறந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் தனது பணியிலிருந்து விலகியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
சுனிதா வில்லியம்சின் தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலா சன் பகுதியை சேர்ந்தவர். நரம்பியல் நிபுணரான அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த போனி என்பவரை மணந்தார்.
ஓகியோவின் யூக்ளிட் நகரில் பிறந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், மெல்போர்னில் உள்ள புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ் 1998-ம் ஆண்டு நாசாவில் பணியில் சேர்ந்தார்.
தற்போது வரை மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று வந்துள்ளார்
இறுதியாக 2024 ஆண்டு , ‘ போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு , பத்து நாட்கள் பயணமாக சென்ற அவர் , தொழில்நுட்ப கோளாறால் , இருநூற்று எண்பத்து ஆறு நாட்கள் அங்கு தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது
சுனிதா இதுவரை மொத்தம் அறுநூற்று எட்டு நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ளார் . அப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை வழிநடத்தியவர் என்ற சிறப்பும் பெற்றார் . இந்த மூன்று பயணங்களிலும் அவர் ஒன்பது முறை விண்வெளியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் . மொத்தம் அறுபத்து இரண்டு மணி நேரம் ஆறு நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார் . விண்வெளியில் அதிக நேரம் நடந்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்
மேலும் , விண்வெளியில் முதல் முறையாக மாரத்தான் ஓட்டம் நடத்தியவர் என்ற பெருமையும் சுனிதாவுக்கு உண்டு
சுனிதா வில்லியம்ஸ் தெரிவிக்கையில்……
என்னை அறிந்த அனைவருக்கும் விண்வெளிதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பது தெரியும். நாசாவில் பணியாற்றியதும், 3 முறை விண்வெளியில் பறக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு நம்பமுடியாத பெருமையாகும்.
நாசாவில் எனக்கு ஒரு அற்புதமான 27 ஆண்டு காலப் பணி வாழ்க்கை அமைந்தது.அதற்கு முக்கிய காரணம் எனது சக ஊழியர்களிடமிருந்து நான் பெற்ற அற்புதமான அன்பும் ஆதரவும்தான். சர்வதேச விண்வெளி நிலையம், அங்குள்ள மக்கள், பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவை உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன. அவை நிலவு மற்றும் கிரகத்திற்கான அடுத்தகட்ட ஆய்வுகளை சாத்தியமாக்கி உள்ளன.
நாங்கள் அமைத்த அடித் தளம் இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளை இன்னும் சற்றே எளிதாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். நாசா – வரலாறு படைப்பதை ஆவலுடன் காணக் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










