உலகில் நிலவும் பிரபலமான விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், தென்கொரியாவின் பிரபலமான விளையாட்டான “ஜோகு” (Jokgu) விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு 24.01.2026 இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு முதல் முறையாக திட்டமிடப்பட்ட இந்த விளையாட்டை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்துள்ளதுடன், இது இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வு கொரிய-உலக ஜோகு கூட்டமைப்பின் தலைவர் ஹொங் கி-யொங் (Mr. Hong Ki-yong) மற்றும் சர்வதேச ஜோகு கூட்டமைப்பின் இலங்கை பிரதிநிதி நந்தன எம்புல்தெனிய ஆகியோரின் தலையீட்டில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே,
உலகில் உள்ள எந்தவொரு விளையாட்டுக்கும் இலங்கையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சர்வதேச விளையாட்டுகளை இலங்கையில் பிரபல்யப்படுத்துவது போன்று, எமது நாட்டுக்கே உரித்தான உள்நாட்டு விளையாட்டுகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்வதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் பாரம்பரிய விளையாட்டுகளை கொரியாவில் பிரபல்யப்படுத்துவதற்கும், அதன் மூலம் எமது விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும் கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இந்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் ஊடாக ஜோகு விளையாட்டை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விளையாட்டை ஊக்குவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் திட்டங்களும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந் நிகழ்வில் கொரிய ஜோகு விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கை சேவைகள் மற்றும் தயாரிப்பு ஊக்குவிப்பு மையத்தின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










