ஹட்டன் பிரிவின் பொல்பிட்டிய கிராமத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் 2026.02.06 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையிலும், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடனும் திறந்து வைக்கப்பட்டது.
பொல்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எச்.எம்.என்.உபுல் குமார ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி, நுவரெலியா பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி, ஹட்டன் பிரிவு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உள்ளிட்ட ஹட்டன் பொலிஸ் பிரிவின் அனைத்து நிலையப் பொறுப்பதிகாரிகளும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர், அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர மற்றும் நவீன கட்டிடத்தில் இந்த நிலையத்தை நிறுவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க முடிந்தமை குறித்து தமது தாழ்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 78.43 பர்ச் நிலப்பரப்பை பெற்றுக்கொண்டு, 2025 நவம்பர் மாதம் முதல் புதிய பொலிஸ் நிலையம் கட்டுமானம் மேற்கொள்ள ஒத்துழைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்புகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு வாடகை அடிப்படையில் பெற்ற சிறிய வீடு ஒன்றில் குறைந்த வசதிகளுடன் இயங்கிய இந்த பொலிஸ் நிலையம், அப் பகுதியின் 07 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 9,000க்கும் அதிகமான மக்களுக்கு முழுமையான சேவையை வழங்கி வந்தது. இதன் பின்னர் அனைத்து வசதிகளுடனும், பொலிசுக்கென ஒதுக்கப்பட்ட தனி நிலப்பரப்பில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இருந்து மேலும் திறம்பட பொதுச் சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










