சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 8 சதவீதமானவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் செலுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 54 ஆயிரத்து 536 மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 69,728 பேர் உடல்நலக் குறைபாடு காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதிலிருந்து தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, மருத்துவ பரிசோதனைகளில் 77 சதவீதமானோருக்குக் கண் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு 8 சதவீதமானோருக்குப் போதைப்பொருள் பழக்கம், 4.48 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய், 3 சதவீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் 2.33 சதவீதமானோருக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










