பல்வேறு காரணங்களால் கடந்த 2020ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்த ராஜகிரிய, ஒபேசேகரபுர அருணோதய மாவத்தை வீடமைப்புத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் இன்று (12.02.2026) மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், நாட்டின் நிதி நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் கட்டுமான நிறுவனங்களின் மந்தகதி காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
குறித்த வீடமைப்புத் திட்டமானது 15 மாடிகளைக் கொண்ட நவீன கட்டடத் தொகுதியுடன் மொத்தம் 300 வீடுகள் அமையவுள்ளன. ஒவ்வொரு வீடும் 500 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருக்கும்.
அத்தோடு, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இதற்காக ரூ. 2,939.49 மில்லியன் நிதியுதவியாக வழங்கியுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை மிகவும் துரிதமாக முன்னெடுத்து, அடுத்த 18 மாதங்களுக்குள் (ஒன்றரை வருடம்) முழுமையாக நிறைவு செய்ய மூலோபாய நிலைபேற்றுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறக் குடியிருப்பாளர்களின் வீட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு, நவீன வசதிகளுடன் இத் திட்டம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.





![]()










