இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கடற்படைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அண்டை நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நிலவும் நெருக்கமான மற்றும் நீடித்த கடல்சார் உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான செயல்பாட்டுத் தொடர்புகள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் ‘சிலினெக்ஸ்’ போன்ற கூட்டுப் பயிற்சிகள் மூலம் வலுப்படுத்தப்படும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வழக்கமான பயிற்சிகள் மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் மூலம் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தளபதிகளும் கலந்துரையாடினர்.
விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 74 நாடுகள் பங்கேற்றன.
இதில் 66 இந்தியக் கப்பல்கள், 19 வெளிநாட்டுக் கப்பல்கள், 3 இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட வானூர்திகள் பங்கேற்றன.
இலங்கைக் கடற்படையின் ‘சாகர” மற்றும் ‘நந்திமித்ர’ ஆகிய போர்க்கப்பல்கள் கண்காட்சியில் பங்கேற்றன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










