ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வசத் சிரிய 2026” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா 24.04.2026 அன்று கொழும்பு 02 இல் உள்ள விமானப்படை மைதானத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
“வசத் சிரிய 2026” புத்தாண்டு விழா, பல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாசார அம்சங்களைக் கொண்டிருந்ததுடன், புத்தாண்டு அழகன், அழகிப் போட்டி உள்ளிட்ட பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், பண்டைய கிராமியச் சமூகத்தில் கிராமத்திற்கும் கிராமிய வீட்டிற்கும் இடையே நிலவிய அழகான பிணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு கிராமிய வீட்டின் மாதிரி வடிவம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில் தின்பண்டங்கள், உடைகள், சிங்கள புத்தாண்டு சடங்குகள் மற்றும் கிராமிய விளையாட்டுகள் உள்ளிட்ட பல காட்சி அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
கடைத் தெரு மற்றும் வைத்திய வீடு என்பனவும் மைதானத்தை அலங்கரித்தன.
“வசத் சிரிய 2026” கொண்டாட்டங்களின் அழகை கண்டு களிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இணைந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் அரச அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










