கொழும்பு நகரில் நாளை (28.04.2026) நடைபெறவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்’ (Walk for Peace) நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.
அதன் அடிப்படையில், நாளை காலை 11.00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு பின்வரும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என போலிஸார் அறிவித்துள்ளது.
01. பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பொரளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, வார்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம் மற்றும் லிப்டன் சுற்றுவட்டம்.
02. தர்மபால மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், சுதந்திர மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை மற்றும் நூலக சந்தி.
03. பித்தல சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராமய விகாரையைச் சுற்றியுள்ள வீதிகள்.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு போலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









