சமோவா நாட்டில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய இளையோர் மற்றும் வளர்ந்தோர் பளுதூக்கல் போட்டிகளில் 16 பதக்கங்களை வென்ற இலங்கை அணியினர் இன்று (08.05.2026) அதிகாலை 04.25 மணியளவில் இந்தியாவிலிருந்து ஏ.ஐ.- 277 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை பாரந்தூக்கும் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இலங்கை சார்பாகப் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் 07 வெள்ளிப் பதக்கங்களையும், 09 வெண்கலப் பதக்கங்களையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சமோவா நாட்டின் ஆப்பியா நகரில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் இம் மாதம் 02 ஆம் திகதி வரை இப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் 27 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த சர்வதேசப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற அனைத்து வீரர்களும் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










