களனி புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக, கோட்டை வீதியின் புகையிரத கடவைக்கு அருகிலான பகுதி நாளை (06.06.2026) காலை முதல் போக்குவரத்திற்காக மூடப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை (06.06.2026) காலை 9:30 மணி முதல் நாளை மறுதினம் (07.06.2026) காலை 7:30 மணி வரை இந்த வீதி மூடப்பட்டிருக்கும் என இலங்கை ரயில் பொறியியல் பிரிவு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.Geographic Reference
அத்துடன் இக்காலப்பகுதியில் குறித்த பாதையூடான புகையிரத சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வாகன சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொரளை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி நோக்கி பயணிப்பவர்களுக்கான மாற்று வழிகள்:
கனரக மற்றும் இருநோக்கு வாகனங்கள்: டிக்கெல் வீதிச் சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி, காசல் வீதி ஊடாக பாராளுமன்ற வீதியை அடைந்து, அங்கிருந்து ஆயுர்வேத சந்தியைச் சென்றடையலாம்.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள்: கோட்டை வீதி வழியாக ருஹுணுகல மாவத்தை சந்தியை அடைந்து, அங்கு இடதுபுறமாகத் திரும்பி, ருஹுணுகல மாவத்தை ஊடாகப் பயணித்து, குருப்பு வீதிச் சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி மீண்டும் கோட்டை வீதியை அடைந்து ஆயுர்வேத சந்தியைச் சென்றடையலாம்.
ஆயுர்வேத சந்தியிலிருந்து பொரளை சந்தி நோக்கி பயணிப்பவர்களுக்கான மாற்று வழிகள்:
கனரக மற்றும் இருநோக்கு வாகனங்கள்: ஆயுர்வேத சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதிக்குள் நுழைந்து, மொடல் பாம் சந்தி மற்றும் டி.எஸ். சந்தி ஊடாகப் பயணித்து, டி.எஸ். சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி பொரள்ளை சந்தியை அடையலாம்.
மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள்: கோட்டை வீதி வழியாக ரொட்னி வீதிச் சந்தியை அடைந்து, அங்கு வலதுபுறமாகத் திரும்பி, குருப்பு மாவத்தை மற்றும் ருஹுணுகல மாவத்தை ஊடாகப் பயணித்து, மீண்டும் கோட்டை வீதியை அடைந்து பொரளை சந்தியைச் சென்றடையலாம்.
அவசர ரயில் விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இதனால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










