இலங்கையின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேராதனை ரோயல் தாவரவியல் பூங்காவிற்கு (Peradeniya Royal Botanical Gardens) வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், சுற்றுலாவை மேலும் ஊக்குவிப்பதற்கும் 10 புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அண்மையில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடியின் தலைமையில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
பேராதனை தாவரவியல் பூங்காவிற்குள் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்துத் தேவையொன்றுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பூங்காவின் பரந்த வளாகத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள் மூலம் மிகவும் வசதியாக சுற்றிப் பார்க்க முடியும்.
தினமும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த பூங்காவிற்குள், எளிதாகச் சென்று வருவதற்கான அணுகல் வசதியை இந்த மின்சார வாகனங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஜயவர்தன மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










