ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 06 குளிரூட்டப்பட்ட லொறிகள் அண்மையில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த கையளிப்பு விழா நடைபெற்றது.
இதன்போது, இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாதாவினாள் (Akio ISOMATA) இந்த லொறி வண்டிகள் உத்தியோகபூர்வமாக அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த புதிய லொறிகளின் மூலம், உள்நாட்டு கடற்றொழில் உற்பத்திகளின் தரத்தைப் பாதுகாத்து, விநியோக நடவடிக்கைகளை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ரஸ் நாசர், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுணுஆரச்சி, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய மற்றும் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும உள்ளிட்ட அமைச்சின் மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










