உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை கருத்துப் பத்திரம் தொடர்பான கலந்துரையாடல் 10.06.2026 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இவ்வறிவுறுத்தலை வழங்கினார்.
தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களானது முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி (ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை), உயர்கல்வி, தொழிற்துறைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி ஆகிய அடிப்படைகளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இதுவரை நாட்டில் நிலவிய கல்வி முறைமை, அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அந்த கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மீளாய்வு செய்து, அதிலிருந்து வெளிப்படும் முக்கிய விடயங்கள் தொடர்பில் புதிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
1991ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர் அவ்வப்போது கல்விக் கொள்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1997ஆம் ஆண்டின் கொள்கையின் கணிசமான பகுதி ஆரம்பக் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
2016ஆம் ஆண்டில் பொதுக் கல்விக்காக மாத்திரம் கொள்கையொன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அதற்கமைய பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது தேசிய கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் கல்வி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளின் போது, கொள்கையொன்றைத் தயாரித்து அதற்கமைய கல்வித்துறையை மாற்றுவதற்குப் பதிலாக, கல்வியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதைய சந்தர்ப்பம் மிகவும் தனித்துவமானது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனியானதொரு கல்விக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரித்து, அக்கொள்கைக் கட்டமைப்பின் அடிப்படையில் மாத்திரம் செயற்படுவதற்குப் பதிலாக, தற்போது நடைமுறையிலுள்ள கல்விச் செயல்முறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாலுள்ள ஒரு முக்கியமானதொரு சவாலாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதுவரை நிலவிய மற்றும் தற்போதுள்ள கல்வி முறைமை முற்றிலும் வெற்றிகரமானது என்றோ அல்லது முற்றிலும் தோல்வியடைந்தது என்றோ தீர்மானிப்பது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள முறைமையின் சாதகமான மற்றும் பாதகமான விடயங்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கல்விச் சீர்திருத்தமொன்று சாதகமான மற்றும் பாதகமான என்பதை குறுகிய காலத்தில் தீர்மானிக்க முடியாது என்றும், அது நீண்ட காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால், ஏனைய சீர்திருத்தங்களை விட கல்விச் சீர்திருத்தங்களின் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்கும் போது எழக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள சமூக சவால்களை ஆழமாக மீளாய்வு செய்து, புதிய சமூகத்திற்குப் பொருத்தமானதொரு பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான விடயங்களை புதிய கொள்கைக் கட்டமைப்பில் உள்ளடக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தற்போது முறையாக மேற்பார்வைக்குட்படாத கல்வியுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும், தனியார் கல்வியை ஒழுங்குபடுத்தாமையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பல்கலைக்கழகக் கல்வியை சீர்திருத்துவது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த உள்ளிட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










