காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக ஐந்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக தீ விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு பாரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சிலர் அதிலிருந்து மீண்டு தங்களது வணிக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள போதிலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமானதாகக் கருதப்படுகின்றன.
இதன் அடிப்படையில், வர்த்தக நிலையங்களை தீ விபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், தீ விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 07.07.2026 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டிலும், காத்தான்குடி நகர சபையின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இளஞ்செழிய பல்லவன் உள்ளிட்ட வளவாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இதன்போது, தீ விபத்துகளைத் தடுக்கும் நடைமுறைகள், தீயணைப்பு கருவிகளை சரியான முறையில் பயன்படுத்தும் விதம், அவசரகால முன்னாயத்தங்கள், தீ பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தீ விபத்துகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிகள் குறித்து விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆர்.என்.அழககோன், காத்தான்குடி சுகாதார வைத்தி அதிகாரி, சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள், காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள், நகர சபை ஊழியர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










