கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 19.08.20226 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக வங்கியின் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ், மேல் மாகாண சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து கொழும்பு கோட்டைப் பகுதியை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளன.
இதன் கீழ் 8 அழகு நிறைந்த சுற்றுலா வலயங்களை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யவும், முறையான போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் துறைமுகத்திற்கு வரும் சுற்றுலாக் கப்பல்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முறையான போக்குவரத்து ஆய்வு (Traffic Study) மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதன் முழுமையான திட்டத்தை தயார் செய்து, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபை இணைந்து மீண்டும் அது குறித்து கலந்துரையாடுமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார். மேலும், முழுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் போது அப்பகுதியில் உள்ள கால்வாய்களைப் புனரமைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஜி. ஹேமச்சந்திர, மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதானிகள் பலரும் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










