உலகின் மிகவும் வயதான நபராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த மூதாட்டியான எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் ஆகஸ்ட் 21ஆம் திகதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர் தனது 117ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவர் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்தார்.
117 வயதை எட்டிய முதல் பிரித்தானியர் என்ற பெருமையை எத்தல் கேட்டர்ஹாம் தற்போது பெற்றுள்ளதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸ் (Inah Canabarro Lucas) தனது 116ஆவது வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் மாதத்தில் எத்தல் கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான மூதாட்டியாக மாறினார்.
இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ள கேட்டர்ஹாம், தனது 110ஆவது வயதில் கொவிட்-19 தொற்றிலிருந்தும் குணமடைந்தார்.
அவர் 1927இல் தனது 18ஆவது வயதில் தனியாக இந்தியாவுக்குப் பயணம் செய்து, அங்குள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்றில் குழந்தைகளைப் பராமரிப்பவராகப் பணியாற்றினார்.
இவரது இந்த அசாதாரண நீண்ட ஆயுள் சாதனையையும் மீறி, எக்காலத்திலும் மிக அதிக காலம் வாழ்ந்து உறுதிப்படுத்தப்பட்ட உலக சாதனைக்கு இன்னும் சில ஆண்டுகள் குறைவாகவே உள்ளன.
பிரெஞ்சுப் பெண்மணியான ஜீன் கல்மென்ட் (Jeanne Calment) 122 ஆண்டுகள் மற்றும் 164 நாட்கள் வாழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










