எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய செயற் திட்டம்!

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4 ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

எல்-நினோ காலநிலை காரணமாக மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.

பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செப்டம்பர் 4 ஆம் திகதி நடத்துவதற்கும், எல்-நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்ப ஊடாக கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், செப்டம்பர் 14 ஆம் திகதி உபகுழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர் மற்றும் அதிகாரிகள் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக் குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects