இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு அமைவாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 பால் பண்ணையாளர்கள் கொண்ட குழுவொன்று இந்தியாவில் விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டுள்ளது.
குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள தேசிய பால் அபிவிருத்தி சபையில் ஆகஸ்ட் 16 முதல் 23 வரை இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.
குறித்த பயிற்சித் திட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள், பால் மதிப்புச் சங்கிலியில் தர உறுதிப்பாடு, சரியான தீவனப் பழக்கவழக்கங்கள் மற்றும் தூய்மையான பால் உற்பத்தி நடைமுறைகள் குறித்து பண்ணையாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
குறிப்பாக, அமுல் தொழிற்சாலை, கைரா பால் ஒன்றியம், என்.டீ.டீ.பீ. ஆய்வகம் மற்றும் தொகுதி பால் குளிர்விக்கும் அலகுகளைப் பார்வையிட்டு, நவீன உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி முறைமைகளை பண்ணையாளர்கள் நேரடியாகக் கற்றுக் கொண்டனர்.
பண்ணை நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதுடன், காலநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான பால் உற்பத்தி உத்திகள் மூலம் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிகாட்டப்பட்டது.
இப்பயிற்சித் திட்டமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பால் பண்ணைத் துறை சார்ந்த தொழினுட்பப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








