உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை…
இன்றைய திகதியில் எம்மில் பலரும் இரவு நேரத்தில் உறங்குவது என்பது குறைந்து விட்டது. அதிலும் இலத்திரனியல் சாதனங்களின் பாவனைகளுக்கு பிறகு உறக்கத்தின் அளவு மட்டுமல்லாமல் தரமான உறக்கம் என்பதும் குறைந்து விட்டது.
இதனால் ஆரோக்கியம் தொடர்பான கேடுகள் அதிகரித்து விட்டது. இந்த தருணத்தில் எம்மில் சிலர் உறங்கும் போது காணும் கனவுகளுக்கு எதிர்வினையாற்றுவதுண்டு.
இதுவும் உறக்க கோளாறுகளில் ஒரு வகை என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள் . இதற்கு சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும் என்றும் அவர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.
REM உறக்க நடத்தை தொடர்பான கோளாறு என்பது தூக்கம் தொடர்பான கோளாறுகளில் ஒன்றாகும். இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்கள் உறங்கும்போது தங்களது கை மற்றும் கால்களை எதிர்பாராத விதமாக அசைப்பார்கள். அத்துடன் குரலாலும் பதிலளிப்பார்கள். அதிலும் குறிப்பாக கனவு காணும் போது அந்த கனவிற்கு இவர்கள் தங்களுடைய உடலால் எதிர்வினையாற்றுவார்கள்.
உங்களுடைய உறக்கத்தின் போது இருபது சதவீதம் இத்தகைய நிலையில் செலவாகிறது. பொதுவாக இத்தகைய பாதிப்புகள் பின்னிரவு நேரத்திலான உறக்கத்தில் நடைபெறுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதனால் இவர்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் துணைக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பாரிய பாதிப்பும் அசௌகரியமும் ஏற்படும்.
உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பேசுவது, சிரிப்பது, கூச்சலிடுவது, அழுவது, கை கால்களை அசைப்பது, உதைப்பது, படுக்கையில் இருந்து திடீரென்று குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இத்தகைய உறக்கம் தொடர்பான கோளாறுகள் இருக்கிறது என அவதானிக்கலாம்.
வைத்தியர்கள் இவர்களுக்கு பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக உறங்குவது குறித்த விழிப்புணர்வுடன் கூடிய ஆலோசனையை வழங்குவார்கள். அதனுடன் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி இதற்கான நிவாரணத்தை அளிப்பார்கள்.
இதற்கு உடனடியாகவும், முழுமையாகவும், முறையாகவும் சிகிச்சை பெறாவிட்டால் உறக்கத்திலேயே பக்கவாதம் உள்ளிட்ட பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு நரம்பியல் தொடர்பான நாட்பட்ட பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இதனால் உங்களின் உறக்கம் தொடர்பான கோளாறுகளை துல்லியமாகவும், உடனடியாகவும் அவதானித்து அதற்கான ஆலோசனையையும், சிகிச்சையையும் பெற வேண்டும்.
வைத்தியர் சுபா


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










