இரத்மலானை பிரதான புகையிரத வேலைத்தளத்தில் இரண்டு புகையிரத பெட்டிகளுக்குள் ஆடம்பர வசதிகளுடன் ஹோட்டல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர புகையிரத ஹோட்டல் இரத்மலானை பிரதான புகையிரத வேலைத்தளத்திலுள்ள ஊழியர்கள் வடிவமைத்துள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
“ஒடிஸி கேம்பர்” என்று பெயரிடப்பட்ட இந்த தனித்துவமான ஹோட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது.
சக்கரங்களில் இயங்கும் ஆடம்பர ஹோட்டல் தற்போது நானுஓயாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கு புகையிரத ஹோட்டலில் மலையகத்தில் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அழகிய காட்சிகளை கண்டு கழிக்கலாம்.
இந்த ஆடம்பர ஹோட்டல் இரத்மலானையில் உள்ள 21, 25 மற்றும் 26 புகையிரத வேலைத்தளத்திலுள்ள ஊழியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான கேம்பர் ஹோட்டலைக் கட்டுவதற்காக, ஒரு பழைய இந்திய புகையிரத பெட்டியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பெட்டியும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன.
விருந்தினர்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றுப்புற் காட்சிகளை பார்வையிடவும் திறந்தவெளிகள், குளியலறைகள் மற்றும் சூடு நீர் கொண்ட அறைகள் மற்றும் நானுஓயா புகையிரத பங்களாவால் வழங்கப்படும் காலை உணவு ஆகியவை இந்த வசதியில் அடங்கும்.
இந்த ஆடம்பர ஒடிஸி கேம்பர் ஹோட்டல் திட்டம் பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தரவின் வழிகாட்டலின் கீழ் புகையிரத மேற்பார்வை பொறியிலாளர் (திட்டங்கள் மற்றும் மேம்பாடு) ஜி.ஏ. கிருஷாந்த மற்றும் வேலைத்தளம் 26 இன் மேற்பார்வை முகாமையாளர் எச்.ஜே.ஆர். பொன்சேகா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய புகையிரத ஹோட்டல் திட்டம் மலைநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு சிறந்த முறையில் விடுமுறையை கழிக்க வழிவகுக்கும். இது புகையிரத பயணத்தின் அழகையும் நவீன வசதிகளையும் மெருகேற்றும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










