இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையே 30.09.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, RMIT பல்கலைக்கழக உப வேந்தர் (Research & Innovation) பேராசிரியர் கெலம் டிரம்மண்ட் (Calum Drummond), STEM கல்லூரி உப வேந்தர் (Research & Innovation) பேராசிரியர் சுஜீவ சேதுங்க, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையை (NIRDC) பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டி. செனரத் யாபா, பணிப்பாளர் (முதலீடு) இந்துனில் குணதிலக மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) ஒருங்கிணைப்பின் கீழ் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
RMIT இலங்கை புத்தாக்க மையத்தை நிறுவுவதன் ஊடாக தற்போதுள்ள கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்களை (Joint PhD) மிகவும் செயற்திறனுடன் செயல்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும்.
இதன் ஊடாக இலங்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும், அவற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தீர்வுகளை வழங்கவும், இந்த திட்டங்களை ஆராய்ச்சி கொள்கைகள் மற்றும் தேசிய தேவைகளுடன் இணைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த செயற்பாடுகளின் ஊடாகக் கிடைக்கும் பலனை மக்களிடையே கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் கூட்டு பட்ட படிப்புத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துதல், உள்ளூர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்முறைக்கு சர்வதேச ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அனுபவங்களை இணைத்தல், RMIT மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல், வர்த்தக நோக்கங்களை அடைதல், புத்தாக்கங்களின் வணிகமயமாக்கலை அதிகரித்தல், உள்நாட்டு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஆர்வமுள்ள சமூகத்திற்கு சர்வதேச அணுகல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் புதிய முதலீடுகள், நிதி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தல் ஆகியவை இந்த புத்தாக்க மையத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்மைகளாகும்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










