வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று (12.05.2026) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்ஸிம் ரிஷென்கோவ் விடுத்த அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இந் நிலையில், அமைச்சர் விஜித்த ஹேரத்தின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாக அமையும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜித்த ஹேரத் பெலாரஸின் தலைநகரான மின்ஸ்க் சென்றதும், அங்கு, அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்திப்பார் என்றும் அதைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் பெலாரஸ் நாட்டின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும், பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டிலும் பங்குபற்றி அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றவுள்ளார்.
அந்நாட்டில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களையும் அமைச்சர் இந்த விஜயத்தின்போது சந்தித்து கலந்துரையாடுவார்.
பல்வேறு துறைகள் சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அமைச்சர் விஜித்த ஹேரத்தின் பெலாரஸ் விஜயத்தின்போது கைச்சாத்தாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










