“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி பாடசாலை வளாகத்தில் இயங்கிவரும் குறுங்கால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சீர்திருத்த நிலையத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கள விஜயம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில், தமிழ் மொழி மூலமான குறுங்கால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சீர்திருத்த நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர், நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலையத்தில் தங்கியுள்ளோருக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் ஆலோசனைச் சேவைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
போதைப்பொருள் பயன்பாடு சமூகத்தின் பல்வேறு வயது பிரிவினரிடையே அதிகரித்து வருவதால், அது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இளைஞர் சமூகமே இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், நாட்டின் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கும் அபாயம் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










