டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக, ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 15.06.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
டித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் நிலப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்குவதில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான தீர்வாக, தற்போது 125 தொழில்நுட்ப அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும், டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்குதல், முழுமையாக சேதமடைந்த வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை வழங்குதல் அல்லது வீட்டு உதவிகளை வழங்குதல், புகையிரதம் மற்றும் வீதியோரக் கால்வாய்கள், பாலங்களை புனரமைத்தல் மற்றும் சேதமடைந்த பாடசாலைகளை புனரமைக்கும் செயல்முறைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் கணிசமான அளவில் நிறைவடைந்து வருவதாகவும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் சில மாவட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பது குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் வீடு ஒன்றைக் கட்டுவதற்காக ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குதல் மற்றும் வீடமைப்புப் பணிகள் ஓரளவிற்கு உயர் மட்டத்தில் இருந்தபோதிலும், மாத்தளை, புத்தளம், கேகாலை, பதுளை, இரத்தினபுரி போன்ற சில மாவட்டங்களில் இச்செயல்பாட்டின் போது எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலை கட்டமைப்பின் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளுக்காக சீனாவும் இந்தியாவும் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
டித்வா அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் அரச நிறுவனங்களைப் புனரமைத்தல் குறித்தும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பைப் பாதித்த ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் போது, ஒரே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளை ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டியிருந்தமையும், அவை அனைத்தையும் ஏனைய அபிவிருத்திப் பணிகளுடன் இணைந்ததாகச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
யுனிசெப் நிறுவனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின்படி, தற்போது அப்பகுதிகளிலுள்ள பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகள் அனைவரும் மீண்டும்பாடசாலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்றும், அது வழமை போல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
வீட்டு நிர்மாணம் மற்றும் புனரமைப்பு செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் மேலும் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபொன்சுவிடம் இதன்போது ஒப்படைக்கப்பட்டது.
செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், அவர்களை இந்த வேலைத்திட்டத்துடன் மிகவும் தீவிரமாக இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ரசல் அபொன்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளான மந்தனா ஸ்மைல் மற்றும் ரோஹண ஹெட்டியாரச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










